தோட்டக்கலை டிப்ளமா மாணவர்களுக்கு அழைப்பு

சென்னை: தோட்டக்கலை தொடர்பான, இரண்டாண்டு டிப்ளமா படிப்புக்கான அறிவிப்பை, தோட்டக்கலைத் துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.தோட்டக்கலைத் துறை
இயக்குனர் சுப்பையன் அறிவிப்பு:தோட்டக்கலைத் துறையின் கீழ், சென்னை - மாதவரம், கிருஷ்ணகிரி - தளி, திண்டுக்கல் - ரெட்டியார்சத்திரம் ஆகிய இடங்களில், பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றன.இங்கு, இரண்டாண்டு தோட்டக்கலை டிப்ளமா படிப்பில் சேருவதற்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்படிப்பில் சேருவதற்கு, உயிரியல், தாவரவியல், விலங்கியல், வேளாண்மை கோட்பாடு மற்றும் செயல்முறை ஆகியவற்றில், ஏதாவது ஒன்றை விருப்ப பாடமாக படித்து, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மாணவ - மாணவியர், 27 வயதுக்கு மேற்படாதவர்களாக இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், அருந்ததியினருக்கு, வயது வரம்பு இல்லை. தோட்டக்கலைத் துறையின், tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில், இம்மாதம், 30 வரை விண்ணப்பிக்கலாம்.விண்ணப்ப கட்டணமாக, பட்டியல் இனத்தவருக்கு, 150 ரூபாய்; மற்றவர்களுக்கு, 300 ரூபாய், 'ஆன்லைன்' வழியாகவே செலுத்த வேண்டும்.மேலும் விபரங்களுக்கு, 044 - 2852 4643 என்ற தொலைபேசி எண்ணில், அலுவலக நாட்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.