310 அரசு பள்ளிகளில் 'பயோமெட்ரிக்' அமல்

திருச்சி: திருச்சி மாவட்டத்தில், 310 அரசு பள்ளிகளில், 'பயோ மெட்ரிக்' முறையில், ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் வருகை பதிவு செய்யப்பட்டது.


தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், அரசு பள்ளிகளில், ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கு மட்டுமின்றி, மாணவ - மாணவியருக்கும், 'பயோ மெட்ரிக்' முறையில், வருகைப் பதிவு செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.

திருச்சி மாவட்டத்தில், 853 அரசு தொடக்கப் பள்ளிகள், 183 உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள், 220 அரசு நடுநிலைப் பள்ளிகள் என, மொத்தம், 1,706 பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில், 6,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்ளனர். இவற்றில், முதல்கட்டமாக, 310 பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு, பயோமெட்ரிக் முறையில், வருகை பதிவு செய்வதற்கான கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோடை விடுமுறைக்கு பின், நேற்று, பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், பள்ளி அலுவலகத்தில் உள்ள, பயோமெட்ரிக் கருவியில், தங்களுடைய, கை விரல் ரேகையை, உள்ளீடு செய்து, வருகை பதிவு செய்தனர்.