பறிபோகிறது 250 மருத்துவ சீட்

சென்னை: தமிழகத்தில், உயர்கல்வி மாணவர் சேர்க்கையில், இந்த ஆண்டு,
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான, 10 சதவீத இடஒதுக்கீடு அமலாகவில்லை. அதனால், 250 இடங்கள் பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.
மத்திய அரசின் புதிய சட்டப்படி, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு, கல்வி, வேலை வாய்ப்பில், 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.இதன் வாயிலாக, முன்னேறிய பிரிவினருக்கு, கூடுதல் இடங்கள் கிடைக்கும். இதை, அனைத்து மாநிலங்களும் பின்பற்றவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
மருத்துவ படிப்பில் மட்டும், 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக, ஒவ்வொரு மாநிலத்துக்கும், கூடுதலாக, 25 சதவீத இடங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், தமிழகத்தில் மட்டும், பொருளாதாரத்தில் நலிந்தோருக்கான இட ஒதுக்கீடு முறை, இந்த ஆண்டு அமலுக்கு வரவில்லை. இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான, அரசாணை எதுவும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை.
எனவே, தமிழக மாணவர்களுக்கு, மத்திய அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய, 250 மருத்துவ இடங்கள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல, இன்ஜினியரிங், ஆர்கிடெக்ட், கால்நடை மருத்துவம் என, பல்வேறு படிப்புகளுக்கான, மத்திய அரசின் இடங்களும், சலுகைகளும், இந்த கல்வி ஆண்டில் கிடைக்காமல் போகும்.