இன்ஜி., கவுன்சிலிங்25ல் துவக்கம்

சென்னை:'பி.இ., மாணவர் சேர்க்கைக்கான, இன்ஜினியரிங் கவுன்சிலிங், வரும், 25ம் தேதி துவங்கும்' என, தமிழக உயர் கல்வி துறை அமைச்சர், அன்பழகன் அறிவித்துள்ளார்.

அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் மாணவர்களை சேர்க்க, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வழியாக, தமிழக அரசின் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கவுன்சிலிங்குக்கு, 1.33 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.இவர்களுக்கான தரவரிசை பட்டியல், வரும், 20ம் தேதி வெளியிடப்படுகிறது. இதையடுத்து, வரும், 25ம் தேதி, சிறப்பு பிரிவினருக்கான, கவுன்சிலிங் துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.உயர் கல்வி துறை அமைச்சர், அன்பழகன், நேற்று வெளியிட்ட அறிவிப்பு:மாற்று திறனாளி ஒதுக்கீட்டுக்கு, வரும், 25ம் தேதி, கவுன்சிலிங் நடத்தப்படும்.முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு, 26ம் தேதியும், விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டுக்கு, 27ம் தேதியும், கவுன்சிலிங் நடத்தப்படும். சென்னை, தரமணியில் உள்ள, மத்திய பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில், கவுன்சிலிங் நடவடிக்கைகள் நடக்கும். தொழிற்கல்வி முடித்தவர்களுக்கு, ஜூன், 26 முதல், 28 வரையிலும், கவுன்சிலிங் நடக்கும். தரவரிசை பட்டியல் வெளியானதும், சிறப்பு பிரிவில் ஒதுக்கீடு பெறும் மாணவர்களுக்கு, எந்தெந்த தேதிகளில், கவுன்சிலிங்குக்கு வர வேண்டும் என்ற தகவல், மொபைல் போன் குறுஞ்செய்தி வழியாக அனுப்பப்படும்.பொது பாட பிரிவு மாணவர்களுக்கு, ஜூலை, 3ம் தேதி முதல், கவுன்சிலிங் நடத்தப்படும். சந்தேகங்களுக்கு, 044 - 2235 1014 மற்றும் 044 - 2235 1015 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.