பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று அசல் சான்றிதழ்

சென்னை:பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, இன்று அசல் மதிப்பெண் சான்றிதழ் தரப்படுகிறது. பள்ளிகளிலேயே, அரசின் வேலைவாய்ப்பு துறைக்கான பதிவும் மேற்கொள்ளப்படும்.


மார்ச்சில் நடந்த, பிளஸ் 2 பொது தேர்வில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, இன்று பள்ளிகளில், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த மாணவர்கள், பிளஸ் 1 பொது தேர்வில், அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே, அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சிக்கு, தனித்தனியே சான்றிதழ் வழங்கப்படும் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.பிளஸ் 1ல், ஏதாவது ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாமல் இருந்தால், அவர்களுக்கு, மதிப்பெண் அடங்கிய பட்டியல் மட்டுமே தரப்படும்.

அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற பிறகே, அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், தனி தேர்வர்கள், தேர்வு மையங்களிலும் சான்றிதழ் பெறலாம். மேலும், தங்கள் சான்றிதழ் வாயிலாக, தமிழக அரசின் வேலைவாய்ப்பு துறைக்கான பதிவையும், பள்ளிகளில் மேற்கொள்ளலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.