10ம் வகுப்பு துணை தேர்வுக்கு செய்முறை தேதி அறிவிப்பு

சென்னை:பத்தாம் வகுப்பு, சிறப்பு துணை தேர்வில் பங்கேற்க உள்ள மாணவர்களுக்கு, செய்முறை தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச்சில் நடந்த, 10ம் வகுப்பு பொது தேர்வுக்கு விண்ணப்பித்து, அதில் பங்கேற்காதவர்கள் மற்றும் தேர்வு எழுதி, சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, சிறப்பு துணை தேர்வு நடத்தப்படும். இந்த மாதம், தேர்வு நடக்க உள்ள நிலையில், ஏற்கனவே விண்ணப்ப பதிவு முடிந்துள்ளது.

இந்நிலையில், இந்த தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, அறிவியல் பாட செய்முறை தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள், வரும், 10 மற்றும் 11ம் தேதிகளில், செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மைய பள்ளிகளின், தலைமை ஆசிரியர்களிடம், விபரங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.