ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பி.இ.ஓ., நியமனம்

திண்டுக்கல், தொடக்க கல்வித்துறையில், வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களில் (பி.இ.ஓ.,) 50 சதவீத இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நியமனம் செய்ய
கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.தொடக்க, நடுநிலை பள்ளிகளை ஆய்வு செய்யவும் மேற்பார்வையிடவும் ஒன்றிய அளவில் உதவி தொடக்க கல்வி அலுவலர் பணியிடம் உருவாக்கப்பட்டது. தற்போது இது வட்டார கல்வி அலுவலர் பணியிடம் (பிளாக் எஜூகேஷன் ஆபீஸர்) என பெயர் மாற்றப்பட்டுள்ளது.நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணி மாறுதல் மூலம் உதவி தொடக்க கல்வி அலுவலர்களாக நியமிக்கப்பட்டு வந்தனர். பள்ளிகளை ஆய்வு செய்வது, மேற்பார்வையிடுவது, ஆய்வு கூட்டங்களில் பங்கேற்பது, ஆசிரியர்களுக்கு முன்னுரிமை பட்டியல் தயாரிப்பது, விடுப்பு அனுமதித்தல், ஆசிரியர்களின் பணிப்பதிவேடு பராமரித்தல், அரசின் நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு சென்றடைய உதவுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் தேதியன்று ஏற்படும் காலி பணியிடத்துக்கு ஏற்ப 30 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமும், 70 சதவீதம் பணிமாறுதல் மூலமும் நியமிக்கப்பட்டனர். தொடக்க, நடுநிலை பள்ளிகளை மட்டுமே வட்டார கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்து வந்த நிலையில், தற்போது உயர்நிலை, மேல்நிலை, மெட்ரிக்., பள்ளிகளையும் இவர்கள் மேற்பார்வையிட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணி மாறுதலுக்கு பதில் பதவி உயர்வு முறையில் நியமிக்கப்பட்டனர்.இந்நிலையில், வட்டார கல்வி அலுவலர்களின் நிர்வாகத்திறனை மேலும் மேம்படுத்தும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் தேதியன்று ஏற்படும் மொத்த காலி பணியிடங்களில் 50 சதவீதம் பணிமாறுதல் மூலமாகவும், 50 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாகவும் நிரப்ப வேண்டும், என பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.