தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் விவகாரம்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தமிழக அரசுக்கு உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்
கோரியும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் திருவண்ணாமலை மாவட்டம் பெருங்களத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றும் இந்திரா, கவிதா, இந்திராகாந்தி, ஜோதி ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனக் கூறி, எங்களைப் பணிநீக்கம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. நாங்கள் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தபோது ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயமாகத் தேர்ச்சிப் பெற வேண்டும் என்ற சட்டம் இல்லை. எனவே அரசின் இந்த முடிவுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் 2019-ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவுகள் வெளியாகும் வரை எங்களை பணிநீக்கம் செய்யக் கூடாது என்று கோரியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சுமார் 60 ஆயிரம் பேர் காத்திருக்கின்றனர். ஆனால் மனுதாரர்கள் வாய்ப்பு கிடைத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறாமல் உள்ளனர். எனவே, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெற்று, சட்டப்படி தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர்கள் பலர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், தகுதித் தேர்வு அறிமுகப்படுத்திய 9 ஆண்டு காலகட்டத்தில் ஆண்டுக்கு இரண்டு முறை என 18 தேர்வுகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறு தகுதித்தேர்வு நடத்தப்படவில்லை. மேலும் மற்ற மாநிலங்களில் தகுதித்தேர்வு தொடர்பாக தெளிவான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதுபோன்ற அரசாணை தமிழகத்தில் பிறப்பிக்கப்படவில்லை. மத்திய அரசு சார்பில் தேசிய அளவில் ஆண்டுக்கு இரண்டு முறை தகுதித்தேர்வு நடத்தப்பட்டாலும், அந்த தேர்வில் தமிழக ஆசிரியர்களால் கலந்துகொள்ள முடியாது. இதனை புரிந்துகொள்ளாமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தனர்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் சுப்பிரமணியம்பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை வரும் ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்தி உத்தரவிட்டனர்.