எட்டாம் வகுப்பு வரை சீருடை மாற்றமா: பெற்றோர் குழப்பம்

சென்னை:ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, பள்ளி சீருடைகள் மாற்றப்படுகிறதா என்பது குறித்து, அரசு தெளிவாக அறிவிக்காததால், பெற்றோர் குழப்பம்அடைந்துள்ளனர்.


தமிழகத்தில், பள்ளி கல்வித்துறை பாடத் திட்டம், தேர்வு முறை, ஆசிரியர்கள் நியமனம், மாணவர்கள் சேர்க்கை உட்பட, பல்வேறு நடவடிக்கைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப் படுகின்றன.இதன் ஒரு கட்டமாக, ஒன்பது மற்றும் 10ம் வகுப்புக்கு ஒரு வகையாகவும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு ஒரு வகையாகவும், சீருடைகள் மாற்றப்பட்டன

அதேபோல, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்கும், சீருடையின் நிறம் மற்றும் வடிவம் மாற்றப் பட்டது.ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாற்றப்பட்ட சீருடை, அரசு பள்ளி மாணவர்களுக்கு கவுரவமாக இல்லை என்ற, புகார் எழுந்தது.'ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்கு, மீண்டும் சீருடை மாற்றப்படும்; அதேபோல, ஆறு முதல் எட்டாம் வகுப்புக்கும் சீருடை மாற்றப்படும்' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்தார்.

இந்த புதிய சீருடைகளை, சில மாணவ - மாணவியர் அணிந்து, அந்த புகைப்படத்தையும் அமைச்சர் வெளியிட்டு, சீருடை மாற்றத்தை அறிவித்தார்.பள்ளிகள் திறப்பதற்கு, இரண்டு வாரங்களே உள்ள நிலையில், புதிய சீருடை குறித்து,அரசாணை எதுவும் வெளியிட ப்பட வில்லை. எந்த சீருடையைவாங்குவது எனத் தெரியாமல், பெற்றோர்தவிக்கின்றனர்.

பள்ளிகளுக்கு சென்று, பெற்றோர் விசாரித்தால், 'துணி கடையில் கேட்டுக் கொள்ளுங்கள்' என, தலைமை ஆசிரியர்கள் கூறுகின்றனர்.'சிலர், இன்னும் அரசு அறிவிக்கவில்லை' என்கின்றனர். பள்ளிகள் திறக்க, இரண்டு வாரங்களே உள்ள நிலையில், எப்படி துணி வாங்கி தைப்பது எனத் தெரியாமல் தவிக்கின்றனர்.