பள்ளிகளின் வசூல் வேட்டை! நீதிபதி கண்டிப்பு!

கோவையில் மாதா அமிர்தானந்த மயி அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளி நிர்வாகம், பாடப்புத்தகங்களுக்கு 5 ஆயிரமும், சீருடைகள், காலணிகள், புத்தகப்பை, மதிய உணவு எடுத்துச்செல்வதற்கான பைகளுக்கு 5 ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும் என்று கூறியதால் பெற்றோர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.   ஹேமலதா உள்ளிட்ட 2 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

நீதிபதி கார்த்திகேயன் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.  அப்போது, தேசியக்கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரைத்த  450 ரூபாய் விலை புத்தகங்களுக்கு பதிலாக, 5 ஆயிரம் விலைகொண்ட ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் புத்தகங்களை பள்ளி நிர்வாகங்கள் வழங்குவதால் நடுத்த பெற்றோர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.  இதன் பின்னர் நீதிபதி,  பாடபுத்தகங்கள், சீருடைகள், காலணிகளை விற்கலாம்.  ஆனால், பிற பொருட்களை வாங்கும்படி பெற்றோரை நிர்பந்திக்கக்கூடாது என்று உத்தரவிட்டார்.