கலெக்டர் சீட்டில் பள்ளி மாணவி

கரூர் : கலெக்டராக விரும்பிய மாணவியை வரவழைத்து, தன் சீட்டில் அமர வைத்து, கரூர் கலெக்டர் அன்பழகன் பாராட்டினார்.


கடந்த முழு ஆண்டு தேர்வு, ஆறாம் வகுப்பு ஆங்கில கேள்வித்தாளில், எதிர்காலத்தில் யாராக வர ஆசைப்படுகிறீர்கள், உங்கள் முன் மாதிரி யார் என, கேட்கப்பட்டிருந்தது. அதற்கு, கரூர் மாவட்டம், குளித்தலை அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி மனோபிரியா, 'நான் கலெக்டர் ஆக விரும்புகிறேன். என் முன் மாதிரி, கரூர் கலெக்டர் அன்பழகன்' என, பதில் எழுதியிருந்தார்.இந்த தகவலை, பள்ளி ஆசிரியர் பூபதி, கலெக்டரின் மொபைல் எண்ணுக்கு, 'வாட்ஸ் ஆப்'பில் அனுப்பியிருந்தார்.

அதை பார்த்த கலெக்டர் அன்பழகன், மனோபிரியாவை அழைத்து வர உத்தரவிட்டார்.இதன்படி, மனோபிரியா உள்ளிட்ட சில மாணவ - மாணவியரை, தலைமையாசிரியர் பூபதி நேற்று, கரூர் கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தார். அவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்ற, கலெக்டர் அன்பழகன், மனோபிரியாவை தன் சீட்டில் அமர வைத்து, பாராட்டு தெரிவித்தார்.

தொடர்ந்து, மாணவ - மாணவியரின் கேள்விகளுக்கு கலெக்டர் பதிலளித்தார். அவர் கூறுகையில், ''வாழ்க்கையில் மறக்க முடியாத உறவு, ஆசிரியர் உறவு. அதை நாம் எப்போதும் மறக்கக் கூடாது,'' என்றார்.