கணினி ஆசிரியர் பணிக்கு தேர்வு

சென்னை:அரசு பள்ளிகளில், கணினி அறிவியல் பிரிவுக்கான முதுநிலை ஆசிரியர் பதவிக்கு, கணினி வழி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளி கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 814 கணினி பயிற்றுனர்கள் என்ற, ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மார்ச், 1ல் வெளியிட்டது.மார்ச், 20 முதல், ஏப்., 10 வரை, 'ஆன்லைன்' வழியில், விண்ணப்பப் பதிவு நடந்தது. இந்த தேர்வுக்கு, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு தேதி, நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வு, கணினி வழியில், ஜூன், 23ல் நடத்தப்படுகிறது. இதற்கான விபரங்களை, www.trb.tn.nic.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.