'சித்தா' படிப்புக்கும், 'நீட்' தேர்வு கட்டாயம்!

'சித்த மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையும், 'நீட்' தேர்வு அடிப்படையிலேயே நடைபெறும்' என, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நாடு முழுவதும்,
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற, அலோபதி மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை, நீட் நுழைவு தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது.அதேபோல, சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும், 2018 - 19 கல்வியாண்டு முதல், நீட் தேர்வு அடிப்படையில் நடைபெறும் என, மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவித்தது.
ஆனால், 2018 - 19ல், மாணவர் சேர்க்கையை, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே, தமிழக அரசு நடத்தியது.இதற்கிடையில், மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம், 'இயற்கை மருத்துவம் மற்றும் யோகா படிப்புகளுக்கு, நீட் தேர்வு தேவையில்லை.ஆனால், சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதா, யுனானி படிப்புகளுக்கு, நீட் தேர்வு அடிப்படையில் தான், மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்' என, இந்தாண்டு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.அதன்படி, தமிழகத்தில், இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு, 393 இடங்கள் உள்ளன.அதில், இயற்கை மருத்துவம், யோகா படிப் புகளுக்கான, 60 இடங்கள் போக, மீதமுள்ள, 333 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, நீட் தேர்வு அடிப்படையில் நடைபெற உள்ளது.இது குறித்து, சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:

சித்த மருத்துவ படிப்புகளுக்கு, நீட் தேர்வு அடிப்படையில், மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்' என, மத்திய ஆயுஷ்அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.அதற்கு, நாம் மறுப்பு தெரிவித்து, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்த, அனுமதி கோரினோம்; மத்திய அரசு ஏற்கவில்லை.இது தொடர்பாக, தமிழக அட்வகேட் ஜெனரலிடமும் ஆலோசனை நடத்தினோம். மற்ற மாநிலங்களில், நீட் தேர்வு அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்துவதால், நாமும், அதையே பின்பற்ற வேண்டும் என, தெரிவித்தனர்.எனவே, நீட் தேர்வின் படியே, மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இருப்பினும், மறு பரிசீலனை கோரி, மத்திய அரசுக்கு, மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளோம். அதற்கு பலன் கிடைக்குமா என, தெரியவில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.