ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு: விண்ணப்பிக்க மே 9 கடைசி

ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜே.இ.இ.- அட்வான்ஸ்டு) முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 9-ஆம் தேதி கடைசி நாளாகும். இந்தத் தேர்வை ரூர்கி ஐஐடி நடத்துகிறது.

மத்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான என்ஐடி, ஐஐஐடி மற்றும் ஐஐடி கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் தொழில்நுட்பப் படிப்புகளில் சேர ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
இது ஜே.இ.இ. (மெயின்) முதல்நிலைத் தேர்வு, ஜே.இ.இ. (அட்வான்ஸ்டு) முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்.
ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி., ஐஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும்.
நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி-க்களில் சேர்க்கை பெற ஐஐடி முதன்மைத் தேர்வில் தகுதி பெற வேண்டும். இதில் 2019-ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வு, தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் கடந்த ஜனவரியிலும், ஏப்ரல் மாதத்திலும் இரண்டு முறை நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
முதன்மைத் தேர்வு: அதனைத் தொடர்ந்து, ஜே.இ.இ. முதன்மைத் தேர்வானது, ரூர்கி ஐஐடி சார்பாக மே 27-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.
முழுவதும் கணினி வழியில் நடத்தப்படும் இந்தத் தேர்வில் இரண்டு தாள்கள் இடம்பெற்றிருக்கும். முதல் தாள் காலை 9 முதல் 12 மணி வரையிலும், இரண்டாம் தாள் பிற்பகல் 2 முதல் 5 மணி வரையிலும் நடத்தப்பட உள்ளது.
இதற்கான ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமை தொடங்கியது. விண்ணப்பிக்க மே 9 கடைசி நாளாகும்.ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வில் தகுதி பெற்றவர்களில் முதல் 2.45 லட்சம் பேர் மட்டுமே, இந்த முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு www.jeeadv.ac.in என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.