புதிய பள்ளி சீருடைகள் ஜூன் 7க்கு பிறகே கிடைக்கும்

ஈரோடு : புதிய பள்ளி சீருடைகள், ஜூன், 7க்கு பின், மாணவ - மாணவியருக்கு கிடைக்கும் என்பது உறுதியாகி உள்ளது.தமிழக பள்ளி கல்வித் துறை, கடந்தாண்டு, ஒன்பது,
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ - மாணவியரின் பள்ளி சீருடையில் மாற்றம் செய்தது.தனியார் பள்ளிகளுக்கு இணையான வண்ணங்களில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் சீருடை வழங்கப்பட்டது.இந்தாண்டு, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அரசு, உதவி பெறும் மாணவ - மாணவியருக்கு, மாற்றம் செய்யப்பட்ட புதிய பள்ளி சீருடைகள் வழங்கப்படும் என, சில நாட்களுக்கு முன், பள்ளி கல்வித் துறை அறிவித்தது.

ஆனால், மிக குறைவான நாட்களே இருப்பதால், பள்ளி திறக்க உள்ள ஜூன், 3ல் சீருடைகள் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.இது குறித்து, பள்ளி கல்வித் துறையினர் கூறியதாவது:சத்துணவு சாப்பிடும் அரசு, உதவி பெறும் பள்ளி மாணவ - மாணவியருக்கு, நான்கு செட் சீருடைகள், ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இந்தாண்டு, சீருடை வண்ணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம், 1.50 லட்சம் பேருக்கு, சீருடை வழங்க வேண்டும்.தற்போது தான், சீருடை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. எனவே, ஜூன், 7க்கு பின் தான் பள்ளிகளுக்கே சீருடைகள் சென்றடையும் என, கணக்கிடப்பட்டுள்ளது.
ஜூன், 10க்கு முன்னதாக, பள்ளி சீருடை வழங்க சாத்தியமில்லை.அதுவரை, கடந்தாண்டு பயன்படுத்திய சீருடையையே அணிந்து வர, மாணவ - மாணவியர் அனுமதிக்கப்படுவர்; இதற்கான அறிவிப்பு, பள்ளி திறக்கும் நாளில் வெளியிடப்படும் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.