3ம் தேதி அமலுக்கு வருகிறது ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் : வருகைப்பதிவு கட்டாயமாகிறது

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் வருகையை கண்காணிக்க பயோ மெட்ரிக் முறை உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் ஜூன் 3ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் வருகையை உறுதிப்படுத்த கடந்த ஆண்டுகளில் செல்போன் மூலம் வகுப்பு ஆசிரியர்கள் பதிவு செய்வது நடைமுறையில் உள்ளது. அதேபோல பள்ளி ஆசிரியர்களின் வருகையை கண்காணிக்க பயோ மெட்ரிக் முறை கொண்டு வரப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.

பள்ளிக்கு வராமல் அடிக்கடிவிடுமுறை எடுக்கும் ஆசிரியர்கள், பள்ளிக்கு வந்து பிறகு வெளியில் செல்லும் ஆசிரியர்கள் ஆகியோரை கண்காணிக்க பயோ மெட்ரிக்முறை பெரிதும் உதவியாக இருக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை நம்புகிறது.
இதையடுத்து, அனைத்து அரசுப் பள்ளிகளில் பயோ மெட்ரிக் கருவி பொருத்தும் பணி மே மாதம் தொடங்கியது. தற்போது உயர்நிலைப் பள்ளிகளில் பயோ மெட்ரிக் கருவிகள் பொருத்தும் பணி முடிந்துள்ளன. நடுநிலைப் பள்ளிகளில் கருவிகள் பொருத்தும் பணி நடக்கிறது.
ஒரு வாரத்தில் அந்த பணிகள் முடியும். தொடக்கப் பள்ளிகளை பொறுத்தவரையில் இந்த கருவிகள் பொருத்தும் பணி எப்போது என்பது இன்னும் முடிவாகவில்லை. இரண்டு மாதங்களுக்கு பிறகு பொருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர்களின் வருகையை கண்காணிக்க பொருத்தப்படும் இந்த பயோ மெட்ரிக் பயன்பாடு ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் போது, செயல்பட வேண்டும் என்றும், 3ம் தேதி முதல் ஆசிரியர்கள் கண்டிப்பாக பயோ மெட்ரிக் கருவியில் விரல்ரேகை பதிவு செய்து வருகையை உறுதி செய்ய வேண்டும்.
பயோ மெட்ரிக் கருவிகள் முறையாக செயல்படுகிறதா என்பதை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்