தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்படும் 25 சதவீத இலவச மாணவர் சேர்க்கையில் தொடரும் குளறுபடிகள்: தகுதியான பயனாளிகள் பலன் பெறவில்லை என குற்றச்சாட்டு

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கையில் தொடரும் குளறுபடிகளால் தகுதியானவர்கள் பலன்பெற முடியவில்லை. எனவே, கட்டாயக் கல்வியின் சட்ட நடைமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவர்.
 
இதில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் இலவசமாக சேரும் மாணவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்த தேவையில்லை. இந்நிலையில் வரும் கல்வியாண்டில் இலவச மாணவர்சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தொடங்கியது. பள்ளிக்கல்வித் துறையின் rte.tnschools.gov.in இணையதளத்தில் பெற்றோர்கள் ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் 1.21 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு இதுவரை ஒருலட்சத்து 7 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிக்க நாளை (மே 18) வரை அவகாசம் இருப்பதால் சேர்க்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த திட்டத்தின்கீழ் பலர் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க விரும்பினாலும், சேர்க்கையில் குளறுபடி நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து பெற்றோர்கள் சிலர் கூறும்போது,‘‘பெரும்பாலான தனியார் பள்ளிகள் தங்களுக்கு வேண்டியவர்களிடம் முன்கூட்டியே பணம் பெற்றுக்கொண்டு இலவச சேர்க்கையில் முறைகேடாக மாணவர்களை சேர்க்கின்றன. சில பள்ளிகளில் இலவச இடங்களுக்கு தேர்வாகும் மாணவர்களிடம் கட்டணம் செலுத்தினால் மட்டுமே பள்ளியில் சேர்ப்போம். அரசிடம் இருந்து பணம் வந்ததும் திருப்பி தருகிறோம் என்று கூறி பணம் செலுத்த வற்புறுத்துகின்றனர்.
 
மேலும், எந்தெந்த பள்ளிகளில் எத்தனை இடங்கள் உள்ளன என்ற விவரமும் கூறப்படவில்லை. அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும் நடவடிக்கை இல்லை’’ என்றனர்.இந்திய மாணவர் சங்க செயலாளர் சந்துரு கூறும்போது, ‘‘கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் ஏழைகள், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவுகளை சேர்ந்த குழந்தைகளுக்குதான் 25 சதவீத இட ஒதுக்கீடுதரப்பட வேண்டும். ஆனால், இச்சட்டம் அமலுக்குவந்து 10 ஆண்டுகளாகியும் உண்மையான ஏழைகளின் குழந்தைகள் பயனடையவில்லை என்பதே நிதர்சனம். நடுத்தர வர்க்கத்தைச்சேர்ந்த பலர் வருமானத்தை குறைவாக காட்டி விண்ணப்பிப்பதால் தகுதியான ஏழை குழந்தைகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகின்றது. அதற்கு இந்த சட்டத்தை அரசு முறையாக அமல்படுத்தாததும், வெளிப்படைத்தன்மை இல்லாததும் காரணம். இதனால் அரசுப் பணம் விரயமாவதுடன், சட்டத்தின் நோக்கம் நிறைவேறாமல் போய்விடும். எனவே, தகுதியான குழந்தைகள் பலன்பெறும் வகையில் அரசு நடைமுறைகளை மாற்ற வேண்டும்’’ என்றார்.தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்று இயங்கும் 640 சிபிஎஸ்இ பள்ளிகளில் இலவச ஒதுக்கீட்டில் 8 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு முதல் சிபிஎஸ்இ பள்ளிகளிலும் இலவச மாணவர் சேர்க்கை நடைபெறும் என அரசு தெரிவித்தது. ஆனால், அதற்கு பெரும்பாலான சிபிஎஸ்இ பள்ளிகள் மறுத்துவிட்டன. அதேநேரம்சில சிபிஎஸ்இ பள்ளிகளில் நேரடியாக இலவச மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதில் 5 சதவீதம்கூட தகுதியானவர்கள் சேர்க்கப்படுவதில்லை என புகார்கள் வருகின்றன.
இதுகுறித்து தனியார் நர்சரி, மெட்ரிக் பள்ளிகள் சங்கத் தலைவர் நந்தகுமார் கூறும்போது, ‘‘மத்திய அரசு கொண்டுவந்த சட்டப்படி ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையே இலவச மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். மறுபுறம் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறையும் என்பதால் எல்கேஜி முதல் இலவச மாணவர் சேர்க்கையை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், எல்கேஜி மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு நிதி வழங்க மறுத்துவிட்டது. இதனால் சிபிஎஸ்இ பள்ளிகள் மாணவர் சேர்க்கை செய்ய முன்வரவில்லை. வேறுவழியின்றி தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசுதான் நிதியை வழங்கி வருகிறது.விதிமுறைப்படி ஒரு மாணவனுக்கு ரூ.11,700 கட்டணமாக தர வேண்டும். ஆனால், கல்வி கட்டணத்தை மட்டுமே அரசு வழங்குகிறது. அதிலும் தனியார் பள்ளிகளுக்கு ரூ.400 கோடி வரை பாக்கியுள்ளது. மேலும், புத்தகம், சீருடை உட்பட இதர கட்டணங்களை தருவதில்லை. இதிலுள்ள குறைபாடுகளை அரசு சரிசெய்ய வேண்டும் ’’என்றார்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சிபிஎஸ்இ பள்ளிகள் மார்ச் மாதமே மாணவர் சேர்க்கையை முடித்துவிடுகின்றன. மேலும், மத்திய அரசும் நிதி வழங்காமல் இழுத்தடிப்பதால் சிக்கல் நிலவுகிறது. எனினும், சிபிஎஸ்இ பள்ளிகளை இணைக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதேநேரம் தனியார் பள்ளிகளின் முறைகேடுகள் தொடர்பாக முதன்மை கல்வி அதிகாரிகளிடம் ஆதாரத்துடன் பெற்றோர்கள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.