ஆசிரியர் தகுதி தேர்வு: 1,552 மையம்

சென்னை, ஆசிரியர் பணிக்கான, 'டெட்' தகுதித் தேர்வுக்கு, 1,552 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம்
அறிவித்துள்ளது.அரசு பள்ளிகளில், ஆசிரியர் பணிகளில் சேர்வதற்கு, மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டப்படி, 'டெட்' தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையில் பணியாற்ற, தகுதி தேர்வின், முதல் தாளும், எட்டாம் வகுப்பு வரை பணியாற்ற, தகுதி தேர்வின், இரண்டாம் தாளும் எழுதி, தேர்ச்சி பெற வேண்டும்.

இதன்படி, இந்த ஆண்டுக்கான, டெட் தேர்வு, ஜூன், 8 மற்றும் 9ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வில், ஆறு லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். 2010ம் ஆண்டுக்கு பின், அரசு உதவி பள்ளிகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களில், இதுவரை, தகுதி தேர்வு முடிக்காதவர்களுக்கு, இந்த டெட் தேர்வில் தேர்ச்சி பெற, அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தேர்வுக்கான, ஹால் டிக்கெட்டுகளை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. மேலும், தேர்வு மையங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுக்கு, 32 மாவட்டங்களில், 1,552 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.முதல் தாளுக்கு, 471 மையங்களும், இரண்டாம் தாளுக்கு, 1,081 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.சென்னையில் மட்டும், முதல் தாளுக்கு, 28; இரண்டாம் தாளுக்கு, 60 என, 88 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.