10,12 ம் வகுப்பில் மொழிப் பாடம் தேர்ந்தெடுப்பது தொடர்பான வெளியான செய்திக்கு பள்ளிக் கல்வித் துறை மறுப்பு

சென்னை : 11, 12ம் வகுப்புகளில் ஏதாவது ஒரு மொழிப்பாடத்தை தேர்வு செய்து படிக்கும் முறை அமலாகும் என்ற செய்திக்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக தேர்வு முறைகளில் பல்வேறு மாற்றங்களை செய்வதற்கான திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அரசின் ஒப்புதலுக்காக அனுப்பியதாக தகவல்கள் தெரிவித்தன. பள்ளிக் கல்வியில்,ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு தேர்வு முறைகள் பின்பற்றப்படுகின்றன. மற்ற மாநிலங்களில், பத்தாம் வகுப்புக்கு பள்ளி அளவில் தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல, மதிப்பெண் வழங்குதல், வினாத்தாள் தயாரித்தல், திருத்தம் போன்றவற்றில், தனித்தனி திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ். பாடத்திட்டத்திலோ, வேறு திட்டம் பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் தேர்வு முறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது.
அதன்படி இன்று காலை வெளியான செய்தியில், பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள திட்டத்தின்படி 11 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் மொழிப் பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்றை விருப்பப் பாடமாக தேர்வு செய்தால் போதும் என குறிப்பிடப்பட்டு இருந்ததாகவும் மேலும் 12ம் வகுப்பில் 600 மதிப்பெண்களுக்கு பதிலாக இனி 500 மதிப்பெண்களுக்கு மட்டுமே தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டன.
அதே போல 9,10ம் வகுப்புகளுக்கான மொழிப் பாடங்களில் முதல் தாள், இரண்டாம் தாள் என்று இருப்பதை  மாற்றி இனி ஒரே தாளாக தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் 11, 12ம் வகுப்புகளில் ஏதாவது ஒரு மொழிப்பாடத்தை தேர்வு செய்து படிக்கும் முறை அமலாகும் என்ற செய்திக்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. மொழிப்பாடம் குறித்து வெளியான செய்தி உண்மையல்ல என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 10ம் வகுப்பு மொழிப் பாடங்களில் இரு தாள்கள் முறையே பின்பற்றப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.