நெல்லை மருத்துவ கல்லூரியில் இந்தாண்டு கூடுதலாக, 100 மாணவர்களை சேர்க்க அனுமதி

சென்னை:திருநெல்வேலி மருத்துவ கல்லுாரியில், கூடுதலாக, 100 மாணவர் களை சேர்க்க, இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதியளித்து உள்ளது.

தமிழகத்தில், 22 அரசு மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. மேலும், ஈரோடு மாவட்டம், பெருந்துறையில், சாலை போக்குவரத்து தொழிலாளர்களின் வாரிசு களுக்காக செயல்பட்டு வந்த, மருத்துவ கல்லுாரியும், இந்தாண்டு அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.இவற்றை தவிர, கரூரில், புதிதாக அரசு மருத்துவ கல்லுாரி, இந்தாண்டு முதல் துவங்கப்பட உள்ளது.
இதனால், மாநில அரசின் கட்டுப்பாட்டில், 24 மருத்துவ கல்லுாரிகள் செயல்படும்.

இதில், 3,000 மருத்துவ படிப்பு இடங்கள் உள்ளன. அவற்றில், 15 சதவீத இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன.இதற்கிடையில், மதுரை மருத்துவ கல்லுாரியில் கூடுதலாக, 95 இடங்கள், திருநெல்வேலி மருத்துவ கல்லுாரியில் கூடுதலாக, 100 இடங்கள். புதிதாக துவக்கப்பட உள்ள, கரூர் மருத்துவ கல்லுாரியில், 150 இடங்கள் என, 345 இடங்களுக்கு அனுமதி வழங்குமாறு, இந்திய மருத்துவ கவுன்சில் எனப்படும், எம்.சி.ஐ., யிடம், தமிழக மருத்துவ கல்வி இயக்குனரகம் விண்ணப்பித்தது.
அதில், திருநெல்வேலி மருத்துவ கல்லுாரிக்கு விண்ணப் பித்திருந்த, 100 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 150 இடங்கள், திருநெல்வேலி மருத்துவ கல்லுாரியில் உள்ளன. இதன் வாயிலாக, இந்தாண்டு முதல், 250 இடங்களுக்கு, திருநெல்வேலி மருத்துவ கல்லுாரியில், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்கு னர், எட்வின் ஜோ கூறியதாவது:கரூர் மருத்துவ கல்லுாரிக்கு, 55 மருத்துவ அலுவலர்களை நியமிக்க, எம்.சி.ஐ., அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல், மதுரை, கரூர் மருத்துவ கல்லுாரிகளில், கூடுதல் மாணவர் சேர்க்கைக்கும், விரைவில் அனுமதி கிடைக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.