தேர்தல்
பணிக்கான மதிப்பூதியத்தை
உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என
வலியுறுத்தப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் ஏப்.18ல் மக்களவை மற்றும்
சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
இப்பணிக்கு வாக்குச்சாவடி அலுவலர்களாக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள்
நியமிக்கப்பட்டனர். வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியாற்ற உள்ள அனைவருக்கும்
பயிற்சி மற்றும் வாக்குப்பதிவு நாள் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும்
போக்குவரத்து படி மற்றும் உணவுப் படி வழங்கப்படும். தேர்தல் பணியில்
ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்கும் நான்கு நாள் பயிற்சி மற்றும்
வாக்குப்பதிவு அன்று பணியாற்றிய பின் மறு நாள்தான் வீடு திரும்ப
முடியும்.இதற்காக வழங்கப்படும் மதிப்பூதியம் இந்த ஆண்டு உயர்த்தப்பட்டதாக
தகவல்
வெளியானது. ஆனால் தலைமை அலுவலருக்கு பயிற்சி கட்டணமாக ரூ.1050ம்,
வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் ரூ.350ம், வாக்குப்பதிவு அன்று ரூ.350ம்,
உணவு படியாக ரூ.300ம் சேர்த்து மொத்தம் ரூ.2 ஆயிரம் 50 வழங்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு அலுவலர் 1க்கு பயிற்சி கட்டணமாக
ரூ.750ம், வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் ரூ.250ம், வாக்குப்பதிவு அன்று
ரூ.250ம், உணவுப் படியாக ரூ.300ம் சேர்த்து மொத்தம் ரூ.ஆயிரத்து 550
வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு ரூ. ஆயிரத்து 300 வழங்கப்பட
உள்ளது.இத்தொகை கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் தொகையாகும்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டச் செயலாளர்
முத்துப்பாண்டியன் கூறியதாவது: ஊதியக்குழு அமல்படுத்தப்பட்ட பின்னர்
தேர்தலுக்கான மதிப்பூதியத்தில் மட்டும் எவ்வித மாற்றமும் இல்லாமல் பழைய
ஊதியம் வழங்குவது ஏற்புடையதல்ல. தேர்தல் பணியில் 80 சதவீதத்திற்கு மேல்
பெண் ஆசிரியர்கள்தான் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு போக்குவரத்து வசதி எதுவும் செய்து தருவதில்லை. எனவே
மதிப்பூதியத்தை உயர்த்தி தருவதுடன் வாக்குப்பதிவு மையத்தில் அச்சமின்றி
பணியாற்றவும், போக்குவரத்து வசதி செய்து தரக்கோரியும் மாநிலத் தேர்தல்
ஆணையரை எங்கள் மாநில அமைப்பு நேரிடையாக சந்தித்து மனு அளிக்க உள்ளது'
என்றார்.