நீட் தேர்வுக்கு ‘ஹால் டிக்கெட்’ இணையதளத்தில் வெளியீடு தேர்வு தேதி மாறி இருந்ததால் தேர்வர்கள் அதிர்ச்சி

மருத்துவ படிப்பில் சேருவதற்கு தேசிய தகுதி நுழைவுத்தேர்வு (நீட்)
நடத்தப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு அடுத்த மாதம் (மே) 5-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, கடந்த ஆண்டு (2018) நவம்பர் மாதம் 1-ந் தேதி தொடங்கி, 30-ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பித்தனர்.


நாடு முழுவதும் மொத்தம் 15 லட்சத்து 19 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த நிலையில் நீட் தேர்வுக்கான ‘ஹால் டிக்கெட்’ www.nta.ac.in, www.ntaneet.nic.in என்ற இணையதளத்தில் தேசிய தேர்வு முகமை நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது.

ஹால் டிக்கெட் வெளியானதும், தேர்வர்கள் ஆர்வமுடன் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தனர். நேற்று முன்தினம் இரவு பதிவிறக்கம் செய்த ஹால் டிக்கெட்டுகளில் தேர்வு தேதி மாறி இருந்ததாகவும், பின்னர், இதுதொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு தெரிவிக்கப்பட்டு, ஹால் டிக்கெட்டுகளில் அது சரிசெய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தேர்வு தேதி மாறி இருந்ததால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அடுத்த மாதம் 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெறுகிறது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு தேர்வு நிறைவு பெறுகிறது. நாடு முழுவதும் 154 நகரங்களிலும், தமிழகத்தில் 14 நகரங்களிலும் தேர்வு நடக்கிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு உள்பட 11 மொழிகளில் இந்த தேர்வு நடைபெறுகிறது.