தேர்தல் பணி அலுவலர்களுக்கு குறைந்த ஊதியம்: தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் மனு



தேர்தலில் பணியாற்றிய வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக முதுகலை ஆசிரியர்கள் சங்கத்தினர் தலைமை தேர்தல் அதிகாரிக்கு மனு அனுப்பியுள்ளனர்.
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
 
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம், தேர்தல் மற்றும் பயிற்சி பணிக்கான உழைப்பூதியம் குறைத்து வழங்கப்பட்டது குறித்து கோரிக்கை விடுத்துள்ளோம். நாடாளுமன்ற தேர்தலுக்காக அரசு ஊழியர்களுக்கு மார்ச் 31, ஏப்ரல் 7, 13, 17 ஆகிய 4 நாட்கள் பயிற்சியும், 18ம் தேதி தேர்தல் பணியும் வழங்கப்பட்டது. இதற்காக  ஒருநாள் ஊதியமாக ரூ.350 வீதம் 5 நாட்களுக்கு ரூ.1,750 வழங்கப்பட்டது. 17 மற்றும் 18 ஆகிய 2 நாட்களுக்கு சிற்றுண்டி செலவு ரூ.300 சேர்த்து மொத்தம் ரூ.2,050 வழங்க வேண்டும்.
 
ஆனால், வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கு, தமிழகம் முழுவதும் ரூ.1,700 மட்டுமே உழைப்பூதியமாக வழங்கப்பட்டுள்ளது. ரூ.350 குறைவாக தரப்பட்டுள்ளது. இதேபோல், தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடியில் பணிபுரிந்த பிற அலுவலர்களுக்கும் குறைவாக ஊதியம் தரப்பட்டு உள்ளது. எனவே, இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து உரிய ஊதியம் கிடைக்க உத்தரவிடவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது