இன்ஜி., கல்லுாரிகளில் கட்டணம் உயர்வு

சென்னை : ''அண்ணா பல்கலையின், 13 உறுப்பு கல்லுாரிகளுக்கான கல்வி கட்டணம், வரும் கல்வி ஆண்டில் உயரும்,'' என, அண்ணா பல்கலை துணைவேந்தர், சுரப்பா
அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் இன்ஜி., கல்லுாரி விழாவில், அண்ணா பல்கலை துணைவேந்தர், சுரப்பா பங்கேற்றார். பின், அவர் அளித்த பேட்டி:அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 13 உறுப்பு கல்லுாரிகளில், கல்வி கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இதுகுறித்து, பல்கலையின் சிண்டிகேட் குழுவில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
கட்டண உயர்வுக்கு, சிண்டிகேட் குழுவும் அனுமதி அளித்துள்ளது. பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லுாரிகளின் பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு ஊதிய பிரச்னை வராமல் இருப்பதற்காக, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களை விட, குறைந்த கட்டணமே நிர்ணயிப்போம். கட்டண உயர்வு மிக குறைவாகவே இருக்கும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகும்.இவ்வாறு, சுரப்பா கூறினார்.