பிளஸ் 2 மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: பிளஸ் 2 தோவு மறுமதிப்பீடுக்கு நாளை திங்கள்கிழமை (ஏப் 22) முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வின் முடிவுகள் கடந்த 19 ஆம் தேதி வெளியானது. இதில் மாணவர்கள் அல்லது தனி தேர்வர்கள், தங்கள் மதிப்பெண்கள் குறைந்து விட்டதாக கருதினால் விடைத்தாளை மறுமதிப்பீடு செய்யவும் மறுகூட்டல் செய்யவும் வழிகாட்டுதலை, அரசு தோவு துறை இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ளார்.
அதில், விடைத்தாள் நகல் பெற ஒவ்வொரு பாடத்துக்கும் கட்டணமாக ரூ. 275 செலுத்த வேண்டும். மறுகூட்டல் செய்ய விரும்புவோர், உயிரியல் பாடத்துக்கு மட்டும் ரூ.305, மற்ற பாடங்களுக்கு தலா ரூ. 205 செலுத்த வேண்டும்.
மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும் தனி தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும் நாளை திங்கள்கிழமை (ஏப் 22) முதல் புதன்கிழமை (ஏப் 24) வரை மூன்று நாள்களுக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.