10ம் வகுப்பு, பிளஸ் 2 வரை சிறப்பு தேர்வு அறிவிப்பு

சென்னை : பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான, சிறப்பு துணை தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மார்ச்சில் தேர்வு எழுதி
தேர்ச்சி பெறாதவர்களுக்கும், ஏற்கனவே முந்தைய ஆண்டுகளில் நடந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும், ஜூனில் சிறப்பு துணை தேர்வுகள் நடத்தப்படுகின்றன.இந்த ஆண்டு, பொது தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வு, ஜூன், 6ல் துவங்கி, 13ல் முடியும். 10ம் வகுப்பு சிறப்பு துணை தேர்வு, ஜூன், 14ல் துவங்கி, 22ல் முடியும்.பிளஸ் 1 சிறப்பு துணை தேர்வு, ஜூன், 14ல் துவங்கி, 21ல் முடியும்.

அனைத்து நாட்களும், காலை, 10:00 மணி முதல், 12:45 மணி வரை தேர்வு நடக்கும். இதில், பிளஸ் 2 பழைய பாட திட்ட மாணவர்களுக்கு மட்டும், 1:15 மணி வரை நடக்கும்.பாட வாரியான தேர்வு தேதி விபரங்களை, www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை, தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்து உள்ளார்.