ஓய்வு வயதை குறைக்க ஆலோசனை

ஊழியர்களுக்கான ஓய்வு வயதை, 58 ஆக குறைக்க, பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் திட்ட மிட்டு வருவதாக, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பொதுத்துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்.,லில், நாடு முழுவதும், 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களும், அதிகாரிகளும் பணிபுரிகின்றனர்.நிறுவனத்தின் மொத்த வருவாயில், 65 சதவீதம், ஊழியர்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது. இதனால், நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள, பி.எஸ்.என்.எல்., நிர்வாகம், ஊழியர்களின் ஓய்வு வயதை, 60ல் இருந்து, 58 ஆக குறைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது: பி.எஸ்.என்.எல்., நிதி நெருக்கடியில் உள்ளது. சமீபத்தில் போராட்டம் நடத்திய நிறுவன ஊழியர்கள், 15 சதவீத ஊதிய உயர்வு கோரினர்.எனவே, ஊழியர்களின் ஓய்வு வயதை, 58 ஆக குறைக்கவும், 56 வயதுக்கு மேற்பட்டோருக்கு, விருப்ப ஓய்வு அளிப்பது குறித்தும், நிர்வாகம் ஆலோசனை நடத்தியுள்ளது.
 
இந்த ஆலோசனை செயல்வடிவம் பெற்றால், ஏராளமானோர் வீட்டிற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையறிந்த ஊழியர்கள், ஊதிய உயர்வு கோரிக்கையை, பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
சம்பளம் கிடைக்குமா?
நிதி பற்றாக்குறை காரணமாக, ஜம்மு - காஷ்மீர், கேரளா வட்டத்தை தவிர, பிற வட்டங்களில், ஊழியர்களுக்கு, பிப்ரவரி மாத சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை.சம்பளத்தை விரைந்து வழங்க வேண்டும் என, ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.