CTET தேர்வில் விருப்ப மொழியாக தமிழ்

இந்த ஆண்டு, மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு, ஜூலை, 7ல் நடக்கும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.பட்டப்படிப்புடன், பி.எட்., முடித்தவர்கள், மத்திய அரசு பள்ளிகள் மற்றும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, மத்திய ஆசிரியர் தகுதி தேர்வான, 'சிடெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இந்த தேர்வு, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யால், ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது.இந்த தேர்வு, இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஆண்டுக்கு ஒரு முறையாக மாற்றப்பட்டது.


 நடப்பு காலண்டர் ஆண்டுக்கான தேர்வு தேதி, நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி, ஜூலை, 7ல், 'சிடெட்' தேர்வு நடத்தப்படுகிறது.முதல் தாளுக்கான தேர்வில், ஆங்கிலம் கட்டாய மொழி பாடமாகவும், இரண்டாம் தாளில் வேறு மொழியை விருப்ப பாடமாகவும் எடுத்து கொள்ள வேண்டும். விருப்ப பாட பட்டியலில், தமிழ் இல்லை என, 2018ல், புகார் எழுந்தது.இந்நிலையில், இந்த ஆண்டுக்கான விருப்பப் பாட பட்டியலில், தமிழ் விருப்ப மொழியாக சேர்க்கப்பட்டுள்ளது. உருது, ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு, அஸ்ஸாமி, சமஸ்கிருதம் உள்ளிட்ட, 20 மொழிகள் இடம் பெற்றுள்ளன.நாடு முழுவதும், 97 நகரங்களில், தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன.'தமிழகத்தில், சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை நகரங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும். தேர்வில் பங்கேற்க விரும்புவோர், www.ctet.nic.in என்ற இணையதளத்தில், மார்ச், 5க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துஉள்ளது.