வருமான வரி கணக்கில், போலி விபரங்கள் இன்றி, தாக்கல் செய்யுமாறு, ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நிதி ஆண்டும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பிப்., இறுதியில், தங்களின் ஆண்டு வருவாய் மற்றும் செலவு கணக்கை செலுத்துவர். இதற்கான விபரங்கள், அந்தந்த துறை தலைமை வழியே தாக்கல் செய்யப்படும்.
இதில், ஒவ்வொருவரும், தங்கள் பெயரில் உள்ள சேமிப்பு கணக்குக்கான கழிவு, பிள்ளைகளின் கல்வி கட்டணம் மற்றும் வீட்டு கடன் குறித்து, விபரங்கள் தாக்கல் செய்வர். அந்த கணக்கின் அடிப்படையில், டி.டி.எஸ்.,என்ற, வருமான வரி பிடித்த தொகை, சம்பளத்தில் கழிக்கப்படும்.ஒரு குடும்பத்தில், கணவன், மனைவி இருவரும் அரசு ஊழியராக இருந்தால், அவர்களில் ஒருவர் மட்டுமே, தங்கள் பிள்ளைகளின் கல்வி கட்டணம் மற்றும் வீட்டு கடன்களை குறிப்பிடலாம். இருவரும் ஒரே கணக்கை, தனித்தனியே காட்டுவது, சட்டவிரோதம்.