அரசு உதவி பெறும் பள்ளிகளில், சுயநிதி பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கும் இலவச, 'லேப்டாப்' வழங்க முடிவு?

அரசு உதவி பெறும் பள்ளிகளில், சுயநிதி பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கும், 'லேப்டாப் கம்ப்யூட்டர்' வழங்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.அரசு பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, அவர்கள் படிப்பை முடித்ததும், இலவச, லேப்டாப் வழங்கப்படுகிறது. 


ஆண்டுதோறும், ஐந்து லட்சம் மாணவர்களுக்கு, லேப்டாப் வழங்கப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில் படிக்கும், மாணவ - மாணவியர் மற்றும், 2017 - 18ம் கல்வி ஆண்டில் படித்த மாணவ -மாணவியருக்கும் சேர்த்து, இந்த ஆண்டு, லேப்டாப் வழங்கப்பட உள்ளது.இந்த திட்டத்தில், வழக்கமாக, அரசு உதவி பெறும் பள்ளிகளில், சுயநிதி பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு, லேப்டாப் வழங்கப்படுவதில்லை. 

இந்த பாகுபாடு காரணமாக, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மத்தியில் பிரிவினை ஏற்பட்டது.இதனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், அனைத்து மாணவர்களுக்கும், லேப்டாப் வழங்க வேண்டும் என, பெற்றோர் தரப்பில், நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. 

இதுகுறித்து, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையனிடம், அதிகாரிகள் தெரிவித்தனர்.அவரும், அரசு உதவி பெறும் பள்ளிகளில், சுயநிதி பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கும், லேப்டாப் வழங்கலாமா என, ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளார். எனவே, தமிழகம் முழுவதும், சுயநிதி பாடப்பிரிவு மாணவர்கள் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் பணி துவங்கிஉள்ளது.