பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு அரசுப் பணியில் 3 சதவீத இடஒதுக்கீடுஅரசாணை வெளியீடு

பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு அரசுப் பணியில் 3 சதவீத இடஒதுக்கீடுஅரசாணை வெளியீடு

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று ஆற்றிய உரையில் முதல்-அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் முதல் நிலைப் போட்டிகள், மாநில அளவிலான போட்டிகள், சர்வதேச அளவிலான போட்டிகள் ஆகியவற்றில் வெண்கலம், வெள்ளி, தங்கப் பதக்கங்களை வென்றால், தமிழக அரசு அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் 2 சதவீதம் வரை உள் ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இதற்கான விதிமுறைகளை வகுப்பதற்கு உயர்நிலைக் குழுவை அமைத்து கடந்த ஆண்டு அக்டோபர் 11-ந்தேதி அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் விளையாட்டுப் போட்டிகளில் விருது வென்றவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி 16.10.2018 அன்று நடந்தது. அப்போது 2 சதவீத இடஒதுக்கீட்டை 3 சதவீதமாக உயர்த்தி முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து ஜனவரி 3-ந்தேதி கூடிய உயர்மட்டக் குழு, அரசுப் பணிகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் 3 சதவீத இடஒதுக்கீட்டை மேற்கொள்வதற்கான வழிகாட்டி நெறிகளை வகுத்தளித்தது.

இந்த ஒதுக்கீட்டை பெறுவதற்கான கட் ஆப் தேதியாக 1.1.2018 தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து 5 ஆண்டுகள், அதாவது 31.12.2022 வரை செய்த சாதனைகள் பரிசீலிக்கப்படும்.

அதிகபட்சமாக 40 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பணியில் சேர்வதற்கான அனைத்து குறைந்தபட்ச கல்வித் தகுதியை வீரர்கள் பூர்த்தி பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு வீரர்கள், அரசுப் பணிகளில் 3 சதவீத இடஒதுக்கீட்டைப் பெறுவது, 4 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

முதலாவதாக, ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்வோருக்கு அரசு பொதுத்துறைகளில் பணியிடம் அளிக்கப்படும். இதன் தர ஊதியம் ரூ.5,400 மற்றும் அதற்கு அதிகமாக இருக்கும்.

இரண்டாவதாக, காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி, வெண்கலம் வெல்லும் வீரர்களுக்கும், பங்கேற்கும் வீரர்களுக்கும் தர ஊதியம் ரூ.4,400 மற்றும் அதற்கு மேல் (ரூ.5,400-க்குள்ளாக) இருக்கும்படி பொதுத்துறைகளில் பணியிடம் அளிக்கப்படும்.

மூன்றாவதாக, ஆசிய, காமன்வெல்த், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்போருக்கும், தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கும் தர ஊதியம் ரூ.2,400 மற்றும் அதற்கு மிகுந்த அளவிலும், (ரூ.4,400-க்கு மிகாமல்) இருக்கும்படி பொதுத் துறை நிறுவனங்கள், அரசுத் துறைகளில் பணியிடம் அளிக்கப்படும்.

நான்காவதாக, மாநில அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு பணியிடங்கள் அளிக்கப்படும். இந்த பணியிடம், ரூ.2,400 என்ற தர ஊதியத்துக்குக் குறைவானதாக இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.