முழு நேர 'நீட்' பயிற்சி இலவசமாக, 13 கல்லூரிகளில் பள்ளி கல்வித்துறை ஏற்பாடு

அரசு பள்ளிகளில் படிக்கும், 10 ஆயிரம் மாணவர்களுக்கு, உணவு,
தங்குமிடத்துடன், 13 கல்லுாரிகளில், இலவசமாக, முழு நேர, 'நீட்' பயிற்சி வழங்க, பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.


பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவப் படிப்பில் சேர, நீட் நுழைவு தேர்வில், தேர்ச்சி பெறுவது கட்டாயம். இரண்டு ஆண்டுகளாக, கட்டாயமாக தேர்வு நடத்தப்படும் நிலையில், தமிழக அரசு பள்ளி மாணவர்கள், இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது, மிகவும் குறைவாக உள்ளது. அரசு பள்ளி மாணவர்களும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவப் படிப்பில் சேர, தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், பல்வேறு வகை சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

நடப்பு கல்வி ஆண்டில், 1,000க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் வாயிலாக, மாநிலம் முழுவதும், 20 ஆயிரம் மாணவர்களுக்கு, நீட் பயிற்சி வழங்கப்படுகிறது. பள்ளி வேலை நாட்களில், மாலை நேரத்திலும், விடுமுறையில், சிறப்பு வகுப்பாகவும், இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், மார்ச், 19ல், அனைத்து பொது தேர்வுகளும் முடியவுள்ள நிலையில், மார்ச், 23 முதல், முழு நேர நீட் பயிற்சி வகுப்பை நடத்த, பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள, 13 தனியார் கல்லுாரிகளின் வளாகத்தில், உணவு, தங்குமிடம் வசதியுடன், இந்த பயிற்சி அளிக்கப்படும். இதற்கு, ஏற்கனவே பயிற்சி பெறும், 20 ஆயிரம் பேரில், அதிக மதிப்பெண் பெறும் நம்பிக்கையுள்ள, 10 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.அவர்களுக்கு, நீட் பயிற்சியில் அனுபவம் பெற்ற, பேராசிரியர்கள், ஆசிரியர்கள், தனியார் பயிற்சி மையத்தினர் வழியாக, காலை முதல் மாலை வரை சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சியை, மே, 3ம் தேதி வரை நடத்த, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.