ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

சென்னை, காலவரையற்ற வேலைநிறுத்தத்தின் முன்னோட்டமாக, மாநிலம் முழுவதும், ஜாக்டோ ஜியோ அமைப்பினர், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அரசு ஊழியர்
சங்கங்கள், அரசு பள்ளி ஆசிரியர் சங்கங்கள் இணைந்த, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில், தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 2011 முதல், அவ்வப்போது போராட்டம் நடத்துவதும், அரசு தரப்பு பேச்சை தொடர்ந்து, போராட்டத்தை நிறுத்துவதுமாக உள்ளனர்.நடப்பு கல்வி ஆண்டில், உயர் நீதிமன்ற வழக்கால், ஜாக்டோ ஜியோ போராட்டம், பல முறை தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, 22ம் தேதி முதல், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.இதில், ஐந்து லட்சம் ஆசிரியர்கள் உட்பட, 12 லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாக, மாநிலம் முழுவதும் நேற்று, ஜாக்டோ ஜியோ சார்பில், அரசு அலுவலகங்கள் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.சென்னையில், ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர், மாயவன் தலைமையில், எழிலகம் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.