எல்.கே.ஜி., பாடம் நடத்த மறுத்தால் சம்பளம், 'கட்'

சென்னை, எல்.கே.ஜி., வகுப்பு நடத்த மறுக்கும் ஆசிரியர்களுக்கு, சம்பளத்தை ரத்து செய்ய, பள்ளி கல்வி துறை திட்டமிட்டுள்ளது.மாணவர் சேர்க்கையை அதிகரிக்க,
தனியார் பள்ளி களை போன்று, அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., மழலையர் வகுப்புகள் துவங்க, அரசு நடவடிக்கை எடுத்துஉள்ளது. முதற்கட்டமாக, 32 மாதிரி பள்ளிகளில் கே.ஜி., எனும் மழலையர் வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. அவற்றில், மான்டிசோரி முறையில், பாடம் கற்று தரப்படுகிறது.அதேபோல், மாநிலம் முழுவதும், தொடக்க பள்ளிகளை ஒட்டியுள்ள, அங்கன்வாடிகளில், மழலையர் வகுப்புகள் துவங்கப்படுகின்றன. இதற்கு, 2,381 தொடக்க பள்ளிகளும், அங்கன்வாடிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில், 52 ஆயிரம் குழந்தைகள், கல்வி பெற உள்ளனர்.இந்த திட்டம், 21ம் தேதி துவங்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட அங்கன்வாடிகளில், மழலையருக்கு பாடம் நடத்த, தொடக்க பள்ளி ஆசிரியைகளும், மற்ற பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.ஆனால், 5 வயதுக்கு மேலான சிறுவர் - சிறுமியருக்கு பாடம் எடுத்த ஆசிரியர்கள், கே.ஜி., வகுப்பில் குழந்தைகளுக்கு பாடம் எடுப்பதா என, எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.அதனால், 'கே.ஜி., வகுப்புக்கான பணி ஒதுக்கீட்டு உத்தரவை பெற மாட்டோம்' என, சங்கங்கள் வழியாக, ஆசிரியர்கள் மிரட்டுகின்றனர். இந்த விவகாரம், திடீர் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்களின் எதிர்ப்பால், கே.ஜி., வகுப்புகளை துவங்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இந்நிலையில், கே.ஜி., வகுப்புக்கான பணி ஒதுக்கீட்டு உத்தரவை மறுக்கும் ஆசிரியர்களுக்கு, அவர்கள் பாடம் எடுக்காத நாட்களுக்கு, சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என, அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.எனவே, இன்று முதல், மீண்டும் பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கும் பணி துவங்க உள்ளது. உத்தரவை பெறாதோரின் பட்டியலை, மாவட்ட வாரியாக சேகரிக்க. முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது.