பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய அரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல்: வரிச் சலுகை உயர்த்தப்பட வாய்ப்பு

நாடாளுமன்றத்தில் வரும் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை ஜனவரி மாதம் 31-ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 1-ஆம் தேதி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்கிறார். 2019 நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக, பட்ஜெட் கூட்டத் தொடர் ஒரே பகுதியாக நடத்தப்பட உள்ளது. இது தற்போதைய மக்களவையின் கடைசி கூட்டமாகவும் இருக்கக் கூடும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த இடைக்கால பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக வருமான வரிச் சலுகை உச்சவரம்பு ரூ. 2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகின.
இதனிடையே ரூ.70 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென மத்திய நிதியமைச்சகத்திடம், ரயில்வேத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.