வங்கி அதிகாரிகள் நாளை, 'ஸ்டிரைக்'

சென்னை -ஊதிய உயர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை, வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு
தெரிவித்து உள்ளது.கூட்டமைப்பின் தமிழக பொதுச்செயலர், ஆர்.சேகரன் கூறியதாவது:நாடு முழுவதும், 3.20 லட்சம் வங்கி அதிகாரிகள், கூட்டமைப்பில் உள்ளனர். தமிழகத்தில், 27 ஆயிரம் அதிகாரிகள் உள்ளனர். மத்திய அரசு அதிகாரிகளுக்கு இணையாக, வங்கி அதிகாரிகளுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும். 2017 ஜனவரி முதல், புதிய ஊதியம் நிலுவையில் உள்ளது. பாகுபாடின்றி, உயர்மட்ட அதிகாரிகள் வரை, அனைவருக்கும் ஊதிய ஒப்பந்தம் அமைக்க வேண்டும். தேசிய வங்கிகள் இணைப்பு, கிராம வங்கிகள் இணைப்பு ஆகியவற்றை கைவிட வேண்டும். இது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும், நாளை ஒரு நாள் வேலை நிறுத்தத்தில், வங்கி அதிகாரிகள் அனைவரும் ஈடுபட உள்ளோம். மேலும், வரும், 26ம் தேதி நடைபெற உள்ள வேலை நிறுத்தத்திலும் பங்கேற்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.