மாணவர்களை வசப்படுத்தும் அரசு பள்ளியின் ஓவிய அறை

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலை பள்ளியில், ஓவியத்துக்கு என்று தனி வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளதுமாணவர்களைவசீகரித்து வருகிறது.


சித்திர எழுத்தில் ஆரம்பித்து கணினி யுகம் வரை அழியாமல் மெருகு கூடி என்றும் இளமையானது ஓவியக்கலை. 'தலைப்பை ஒட்டி வரைதல், எதிர்கால கலைகளை வரைதல், இலக்கிய காட்சி வரைதல், நவீன ஓவியம், கார்ட்டூன், பானை ஓவியம், கோலம், வண்ண கோலம், களிமண், மணல் சிற்பம், காகித கூழ் பொருட்கள், காகித வேலை, கணினி வரைகலை, ஒளிப்படம், கணினி வழி கலை களஞ்சியம்' என 15 விதமான போட்டி ஓவியத்தில் நடத்தப்படுகிறது.

ஓவியக்கலையை மெருகூட்டும் விதமாக காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலை பள்ளியில் ஓவியத்துக்கு தனி அறையை உருவாக்கி மாணவர்கள் பயிற்சியில் ஈடுபட வழி செய்துள்ளார் ஓவிய ஆசிரியர் முத்துப்பாண்டியன். அழகப்பா பல்கலை துணைவேந்தர் இந்த ஓவிய அறையை திறந்து வைத்து மாணவர்களுக்கு அர்ப்பணித்தார்.

முத்துப்பாண்டியன் கூறும்போது: ஓவிய பாட வேளையில் மாணவர்கள் வகுப்பறையில் இருந்து படங்கள் வரைவதை காட்டிலும் அதற்கான சூழல் கொண்ட அறையிலிருந்து வரையும்போது, ஆற்றல் மெருகூட்டப்படும், என்பதன் அடிப்படையில் இந்த அறை அமைக்கப்பட்டுள்ளது. பென்சில், வாட்டர் கலர், அக்ரலிக் பெயின்டிங், களிமண், பேப்பர், செதுக்கு சிற்பம் என பல விதமான பயிற்சி அளிக்கப்படுகிறது.பலவித ஓவியங்களுடன், ஓவியத்துக்கு தேவையான அனைத்து பொருட்களும் இருப்பதால் ஆய்வறையாக உள்ளது.எம் பள்ளி மாணவர்கள் மாவட்ட, மாநில அளவிலான ஓவியப்போட்டியில் ஏராளமான பரிசு வென்றுள்ளனர். ஓவியத்தில் சிறந்து விளங்கிய முத்துக்குமார் என்ற மாணவர் ஆர்க்கிடெக்சராகவும், செல்வக்குமார் ஸ்தபதியாகவும், மணிகண்டன் ஓவிய ஆசிரியராகவும், சிவப்பிரகாஷ் சினிமாத்துறையில் ஆர்ட் பிரிவிலும் பணியாற்றி வருகின்றனர், என்றார்.