ஆசிரியர் பணி தேர்வு : குவிந்தனர் பட்டதாரிகள்

சென்னை: கேந்திரிய வித்யாலயாவில், ஆசிரியர் பணியில் சேருவதற்கான போட்டி தேர்வு, நேற்று நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் பங்கேற்றனர்.மத்திய
மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில், நாடு முழுவதும், 1,200 கேந்திரிய வித்யாலயா என்ற, கே.வி., பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளில், 12.76 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இவற்றில், பெரும்பாலான பள்ளிகளில், தற்காலிக ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.இந்நிலையில், கே.வி.,யில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் நுாலகர்கள் பணியிடங்களை நிரப்ப, போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. நேற்று முன்தினம், இந்த தேர்வு துவங்கி, நேற்றுடன் முடிந்தது.காலை, 9:00 முதல், மாலை, 6:00 மணி வரை, மூன்று பிரிவுகளாக தேர்வு நடத்தப்பட்டது. இரண்டரை மணி நேரத்திற்கு பதில் எழுதும் வகையில், தேர்வு நடந்தது. சென்னை சென்ட்ரல் முதல், அரக்கோணம் வரையிலான மின் ரயில் பாதையில், பராமரிப்பு பணி நடந்ததால், பல மின் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், தேர்வர்கள் தாமதமாகச் சென்று, தேர்வை எழுத முடியாமல் திரும்பினர்.