அறிவியல் அறிஞர் விருது முதல்வர் வழங்கினார்

சென்னை, தமிழகத்தில், 29 பேருக்கு, அறிவியல் அறிஞர் விருதுகளை, முதல்வர்
பழனிசாமி நேற்று வழங்கினார்.தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றம் சார்பில், 'தமிழக அறிவியல் அறிஞர் விருது' வழங்கப்பட்டு வருகிறது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு, தங்களின் ஆராய்ச்சி வழியாக பங்களிப்பு செய்தவர்களுக்கு, இந்த விருது வழங்கி, கவுரவிக்கப்படுகிறது.வேளாண்மை அறிவியல், உயிரியல், வேதியியல், சுற்றுச்சூழலியல், பொறியியல் தொழில்நுட்பம், கணக்கியல், மருத்துவம், இயற்பியல், கால்நடை அறிவியல், சமூகவியல் ஆகிய பிரிவுகளில், இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.அதன்படி, 2015ம் ஆண்டு விருதுக்கு, 10 பேர்; 2016 - ஒன்பது பேர்; 2017 - 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, விருதுடன், தலா, 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, பட்டயம் மற்றும் சான்றிதழ்களை, முதல்வர் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் பங்கேற்றனர்.