காலவரையற்ற வேலை நிறுத்தம் கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கம் பங்கேற்காது

''பல்வேறு சங்கங்கள் அறிவித்துள்ள காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில், தமிழ்நாடு கல்வித் துறை அலுவலக பணியாளர் சங்கம் பங்கேற்காது,'' என, மாநில தலைவர் துரைப்பாண்டியன் தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது:


பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். ஏழாவது ஊதிய குழு பரிந்துரை அடிப்படையில், 21 மாத சம்பள நிலுவையை வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது உட்பட, 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 4 முதல் ஆசிரியர், அலுவலர் உள்ளிட்ட சங்கங்கள், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளன.

இந்நிலையில், அரசு அலுவலர் ஒன்றியம், அலுவலக பணியாளர் சங்கம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், அமைச்சர் ஜெயகுமாரை சந்தித்து பேசினர். பேச்சு சுமுகமாக இருந்தது. முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று, விரைவில் நிறைவேற்றி தருவதாக, அமைச்சர் உறுதியளித்தார்.இதன் அடிப்படையில், வரும், 4ல் அறிவித்துள்ள காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில், நாங்கள் பங்கேற்பதில்லை என முடிவு செய்துஉள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.