அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் 8 லிருந்து 5 ஆக குறைப்பு

உயர்,மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 8 லிருந்து 5 ஆக குறைக்கப்பட்டதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10 ம் வகுப்பு வரை குறைந்தது8 பட்டதாரி ஆசிரியர், ஒரு தலைமைஆசிரியர் பணியிடம் அனுமதிக்கப்பட்டது.
 
 தற்போது 160 மாணவர்கள் வரை 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.தற்போது 161 முதல் 200 மாணவர்கள் வரை கூடுதலாக ஒருவர் என, 40 மாணவர்களுக்கு தலா ஒரு ஆசிரியர் நியமிக்கலாம் என, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. மேலும் 2018 செப்., 30 ல் மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயிக்கவும் தெரிவிக்கப்பட்டது.பெரும்பாலான பள்ளிகளில் 160க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர். இதனால் 5 ஆசிரியர்கள் மட்டுமே இருக்க முடியும். மற்றவர்கள் உபரி ஆசிரியர்களாக கணக்கிட்டு பணிநிரவல் செய்யப்பட உள்ளனர். இதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
 
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக சிவகங்கை மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ் கூறியதாவது:ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு நாளைக்கு 8 பாடவேளைகள் உண்டு. அதன்படி 6 முதல் 10 ம் வகுப்பு வரை வாரத்தில் 5 நாட்களுக்கு 200 பாடவேளைகள் வரும்.
ஒரு ஆசிரியருக்கு வாரத்தில் 5நாட்களுக்கு 28 பாடவேளைகள் அனுமதிக்கப்படுகிறது. ஐந்து ஆசிரியர்கள் 140 பாடவேளைகள் மட்டுமே பணிபுரிய முடியும். மீதமுள்ள60 பாடவேளைகளுக்கு ஆளில்லாத நிலை ஏற்படும். இதனால் குறைந்தபட்சம் 8 ஆசிரியர்கள் இருந்தால் மட்டுமே சரியாக இருக்கும், என்றார்.