பள்ளி 3 வது மாடியில் குதித்து மாணவி தற்கொலை முயற்சி

சிவகங்கை: சிவகங்கை தனியார் பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து பிளஸ் 2 மாணவி தற்கொலைக்கு முயன்றார்.சிவகங்கை மஜீத் ரோட்டை சேர்ந்த
செல்லப்பாண்டியின் மகள் தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். நவ., 29ல் வகுப்பறையில் கவலையுடன் இருந்துள்ளார். காலை 8:40 மணிக்கு பள்ளியின் மாடியில் இருந்து கீழே குதித்தார். இடுப்பு எலும்பு முறிந்து காயம் அடைந்த அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.சிவகங்கை போலீசில் அவரது தந்தை நேற்று கொடுத்துள்ள புகாரில், 'நவ., 29 ல் பள்ளிக்கு ஒற்றை சடையுடன் வந்ததால் எனது மகளை, ஆசிரியை ஒருவர் தரக்குறைவாக திட்டினார். தலைமை ஆசிரியர், பள்ளி செயலர் ஆகியோர் ஆசிரியைக்கு உடந்தையாக இருந்ததால் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். செயலர், தலைமை ஆசிரியர், ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக்கூறியுள்ளார்.இன்ஸ்பெக்டர் அழகர் விசாரிக்கிறார்.