நீட்' தேர்வுக்கு விண்ணப்பம் உதவ அதிகாரிகளுக்கு உத்தரவு

'புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த, மாணவர்கள், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க, அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும்' என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.நாடு முழுவதும், 2019, மே., 5ல், நீட் தேர்வு நடக்க உள்ளது. அதற்கு, இணையதளம் வாயிலாக, நவ., 30க்குள், மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். 


இதுபற்றி மாணவர்களுக்கு வழிகாட்ட, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றிக்கை அனுப்ப வேண்டும் என, ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் நேற்று பிறப்பித்த உத்தரவு:இணையதள வசதி இல்லாமல், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் சிக்கி தவிக்கும் மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை, ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் செய்துதர வேண்டும்.

அதேபோல், கஜா புயலால் பாதிக்கப்பட்ட, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க, சிறப்பு கவனம் செலுத்தி, அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும்.பிற மாவட்ட மாணவர்களும் விண்ணப்பித்து விட்டனரா என்பதை, அந்தந்த முதன்மை கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் வாயிலாக உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.