மாவட்டங்களில் தேர்வு அலுவலகம் அடுத்த வாரம் முதல் செயல்படும்

சென்னை, பள்ளி கல்வித்துறை சார்பில், 32 மாவட்டங்களிலும், அரசு தேர்வு துறை அலுவலகம், அடுத்த வாரம் முதல் இயங்க உள்ளது. எனவே, சான்றிதழ்களுக்காக
மாணவர்கள், சென்னைக்கு வரவேண்டியதில்லை.பள்ளி கல்வி துறையின் கீழ் இயங்கும், அரசு தேர்வு துறைக்கு, சென்னையில் இயக்குனர் அலுவலகம் உள்ளது. மேலும், சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி, வேலுார் மற்றும் கடலுாரில் மண்டல அலுவலகங்கள் உள்ளன. ஆனால், மாணவர்கள் தேர்வு தொடர்பாகவும், சான்றிதழ் தொடர்பாகவும், சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு தான், வர வேண்டிய நிலை உள்ளது.

இதை மாற்றும் வகையில், மாவட்டம் தோறும், தேர்வு துறை அலுவலகம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, 32 மாவட்டங்களிலும், அடுத்த வாரம் முதல், மாவட்ட தேர்வுத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதனால், மாணவர்களும், பள்ளி நிர்வாகத்தினரும், தேர்வு மற்றும் சான்றிதழ் தொடர்பாக, சென்னைக்கு அலைய வேண்டியதில்லை; உதவி இயக்குனர் அலுவலகத்தை நாடலாம் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.