மாநில அறிவியல் கண்காட்சி 'கஜா'வால் தவிக்கும் மாணவர்கள்

மதுரை, மதுரையில் நாளை துவங்கும் மாநில அறிவியல் கண்காட்சியில், 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் மாணவர்கள் பங்கேற்க முடியுமா என, சர்ச்சை
எழுந்துள்ளது.நாளை துவங்கி, 24ம் தேதி வரை நடக்கும் கண்காட்சியில் பங்கேற்க, மாணவரின் அறிவியல் படைப்புக்களை, இன்று இரவுக்குள் மதுரை எடுத்துவர அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆனால், கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை, கடலுார், உட்பட, பல மாவட்டங்களில், இன்னும் முழுமையான மின்சாரம், குடிநீர் கிடைத்தபாடில்லை.அங்கு பெரும்பாலான மக்கள் உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். தேவை அடிப்படையில், மீண்டும் புதிய பாடப்புத்தகங்கள் வழங்க, கல்வித்துறை கணக்கெடுக்கிறது. இந்நிலையில், அனைத்து மாவட்ட மாணவர்களும் பங்கேற்பதில், பெரும் சிரமம் ஏற்படும்.தலைமையாசிரியர்கள் கூறியதாவது: கல்வி அமைச்சர், துறை செயலரே தஞ்சையில் நிவாரண பணிக்காக முகாமிட்டுள்ளனர். ராமநாதபுரம் முதல் சென்னை வரை, அனைத்து பகுதிகளிலும் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கண்காட்சியில், அனைத்து மாவட்ட மாணவர்களும், முழு அளவில் பங்கேற்க வாய்ப்பில்லை. அவசரமின்றி புயல், மழை ஓய்ந்த பின் கண்காட்சியை நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.