தென் தமிழகம், புதுச்சேரியில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

இலங்கை மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல், இந்தியப் பெருங்கடல்,
குமரிக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தென் தமிழகம், புதுச்சேரியில் வியாழக்கிழமை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் புதன்கிழமை கூறியது:
இலங்கை மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல், இந்தியப் பெருங்கடல், குமரிக் கடல் பகுதியில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது தற்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக குமரிக் கடல், இலங்கையையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவுகிறது. இதன் காரணமாக, தென் தமிழகம், புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. வடக்கு மற்றும் உள்மாவட்டங்களில் மழை இருக்காது. சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: தெற்கு அந்தமான் கடல், அதையொட்டிய தென் கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது.இது மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து மேலும் வலுவடைய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக அந்தமான் கடல், அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கு வெள்ளிக்கிழமையும் (நவ. 9), தென்கிழக்கு, அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கு சனிக்கிழமையும்(நவ. 10) மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.