உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடிப்பு: தமிழகத்தில் 786 வழக்குகள் பதிவு

சென்னை: உச்ச நீதிமன்றம் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 786 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தில்லி உள்ளிட்ட பெரு நகரங்களில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், தீபாவளியன்று பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி இரவு 8 முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். அதேநேரத்தில் தமிழகத்தைப் பொருத்தவரையில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை மாநில அரசே முடிவு செய்துகொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து, தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கும் நேரமாக தமிழக அரசு அறிவித்தது.
உச்சநீதிமன்ற உத்தரவையும், தமிழக அரசின் உத்தரவையும் அமல்படுத்துவதில் தீவிரம்காட்டி வந்த காவல்துறையினர் "தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதை மக்கள் பின்பற்ற வேண்டும்.
ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்தால் இந்திய தண்டனைச் சட்டம் 188, 255 மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்படும். ஒதுக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து யாராவது பட்டாசு வெடிக்கிறார்களா என்பதை காவல் துறையினர் கண்காணிப்பார்கள். பொதுமக்களிடம் இருந்து பட்டாசு வெடித்தது தொடர்பாக புகார் வந்தால், அது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்' காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், தீபாவளி திருநாளான இன்று பட்டாசு வெடிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் தெளிவாக பிறப்பித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 371 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. சென்னையில் 97 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விருதுநகரில் 80 வழக்குகள், சாத்தூர் 15, சிவகாசி 16, அருப்புக்கோட்டை 7, திருச்சுழி 5, ராஜபாளையம் 12 மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் 12, கடலூர் 13, விழுப்புரம் 255, ராசிபுரம் 1, நாமக்கல் 7, ஈரோடு 7, சேலம் 50, கொடைக்கானல் 2, தஞ்சை 10, நெல்லை 10, கோவை 85, திருப்பூர் 57, வேலூர் 2, அரியலூர் 14 என இதுவரை 786 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பல இடங்களில், பிடிபட்ட சிறுவர்கள், எச்சரிக்கை செய்யப்பட்டு, அவர்களுக்கு பதிலாக பெற்றோர்கள் கைது செய்யப்பட்டனர். ராசிபுரத்தில் கைது செய்யப்பட்ட ஏசி மெக்கானிக், சித்தேஸ்வர பிரபு(40) என்பவர், பின்னர் காவல்துறை ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். திருவிடைமருதூர் அருகே மருதாநல்லூரில் சுபாஷ் சந்திரபோஸ்(27), ராஜவேல்(36) கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் பல நகரங்களிலும் போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.