சித்தா, ஆயுர்வேத படிப்பு 600 இடங்கள் நிரம்பின

சென்னை, :சித்தா மருத்துவ படிப்பில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், 600 இடங்கள் நிரம்பின. சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை
படிப்புகளுக்கு, தமிழகத்தில் உள்ள, அரசு மருத்துவ கல்லுாரிகளில், 390; சுய நிதி மருத்துவ கல்லுாரியில், 1,423 இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளுக்கான கவுன்சிலிங், சென்னை, அரும்பாக்கம், அரசு சித்தா மருத்துவமனை வளாகத்தில் நேற்று முன்தினம் துவங்கியது.
இதில், அரசு மருத்துவ கல்லுாரிகளில், 45 யுனானி இடங்களை தவிர, அனைத்து இடங்களும் நிரம்பின. நேற்று மாலை வரை, அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, 600 இடங்கள் நிரம்பின. இதுகுறித்து, மருத்துவ தேர்வு குழு அதிகாரிகள் கூறியதாவது:
யுனானி படிப்பில், உருது தெரிந்தவர்கள் மட்டுமே சேர முடியும் என்பதால், அந்த இடங்கள் தற்போது நிரம்பவில்லை. தொடர்ந்து, 23ம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறுகிறது. அதில், அனைத்து இடங்களும் நிரம்பும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.