ஆசிரியர்கள் 3 பேருக்கு ஐ.சி.டி., விருது

சென்னை: மத்திய அரசின், தகவல் தொழில்நுட்ப வழி கல்விக்கான விருதுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.அரசு
பள்ளிகளில், தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு சார்பில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில், தகவல் தொழில் நுட்பமான, 'இன்பர்மேஷன் டெக்னாலஜி'யை பயன்படுத்தி, கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் மத்திய அரசின், ஐ.சி.டி., விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.

இந்த ஆண்டு தேசிய அளவில், 43 பேருக்கு, ஐ.சி.டி., விருதை, மத்திய மனிதவள அமைச்சகத்தின் நிறுவனமான, தேசிய கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவித்துள்ளது. மொத்தம், 13 மாநிலங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.இதில், ஜி.செல்வகுமார், பி.கருணைதாஸ், வி.லாசர் ரமேஷ் ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் என, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்த ஆசிரியர்களுக்கு, வரும், 21ல், டில்லியில் நடக்கும் விழாவில், விருது வழங்கப்பட உள்ளது.