குரூப் 2 தேர்வு: உத்தேச விடைகள் இன்று வெளியீடு: ஆட்சேபங்களை விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் தெரிவிக்கலாம்

குரூப் 2 தேர்வுக்கான உத்தேச விடைகள் புதன்கிழமை வெளியிடப்பட உள்ளன. இந்த விடைகளில் ஏதேனும் ஆட்சேபங்கள் இருந்தால், அவற்றை மறுத்து இணையதளத்தில்
மட்டுமே விண்ணப்பதாரர்கள் உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்க முடியும் என, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. இந்தப் புதிய நடைமுறை குரூப் 2 தேர்வில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
குரூப் 2 தேர்வுக்கான உத்தேச விடைகள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.tnpsc.gov.in) புதன்கிழமை வெளியிடப்படும். இந்த உத்தேச விடைகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால், விண்ணப்பதாரர்கள் அதனை தேர்வாணையத்துக்கு தெரிவிக்கலாம். இதற்கான கோரிக்கைகள் இதுவரை எழுத்துப்பூர்வமாகவே அதாவது கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலமாகவே பெறப்பட்டு வந்தன.
புதிய நடைமுறை ஏன்?: கடிதம் அல்லது மின்னஞ்சல் வழியாக பெறப்படும் கோரிக்கைகளை அட்டவணைப்படுத்தி, வினா எண் வாரியாக பிரித்தெடுத்து, அதற்கான ஆவணங்களை நகலெடுத்து உரிய வல்லுநர் குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கு சுமார் ஒரு மாதம் அவகாசம் தேவைப்படுகிறது. இதனால், தேர்வுக்கான முடிவுகளை வெளியிடுவதிலும் தாமதம் ஏற்படுகிறது. எனவே, இந்த கால தாமதத்தை குறைக்க தேர்வாணையம் புதிய முறையை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.
புதிய முறை: உத்தேச விடைகள் குறித்த மறுப்புகள் இனி இணைய வழியில் மட்டுமே பெறப்படும். தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள் மட்டுமே அந்தத் தேர்வுக்கு உரிய உத்தேச விடைகளை மறுத்து சரியான விடைகளை கோர முடியும்.
தேர்வின்போது, தேர்வர்கள் எந்த வரிசை கேள்வித்தாளை பயன்படுத்தி விடையளித்திருந்தாலும், தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள மாதிரி கேள்வித்தாள் வரிசையில் உள்ளபடி மட்டுமே தேர்வர்கள் உத்தேச விடைகளை மறுத்து சரியான விடைகளைக் கோர முடியும்.
விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண், விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும். அதைத்தொடர்ந்து, தேர்வர்கள் தேர்வெழுதிய பாடத்தினை தேர்வு செய்து பின்னர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கேள்வித்தாள் வரிசையில் உள்ளபடி வினா எண்ணை தேர்வு செய்தால், அதற்கான கேள்வி மற்றும் சரியான விடைக்குறிப்பு திரையில் தோன்றும்.
எப்போது நிராகரிக்கப்படும்?: விடைக்குறிப்பில் இடம்பெற்றுள்ள விடைகளில் மாறுபட்ட கருத்து இருந்தால் அதன் கீழே தோன்றும் சரியான விடை அல்லது விடைகளைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் அதன் கீழே இருக்கும் கட்டத்தில் தேர்வர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்யலாம்.
அதனைத் தொடர்ந்து தேர்வர்கள் தெரிவிக்கும் விடைகள் எந்த புத்தகத்தில் உள்ளது, அதன் ஆசிரியர், பதிப்பு வருடம், பதிப்பாளர், பக்க எண் ஆகிய தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும்.
பின்னர், தேர்வர்கள் தெரிவித்த விடைக்கு வலுச்சேர்க்கும் உரிய ஆவணங்களை பிடிஎஃப் கோப்புகளாக பதிவேற்றம் செய்ய வேண்டும். தேர்வர்கள் தெரிவிக்கும் விடைகள் எந்த புத்தகத்தில் உள்ளது என்பதற்கான தகவல்களும், விடைக்கு வலுசேர்க்கும் உரிய ஆவணங்களும் இல்லாத கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது.
பதிவேற்றம் செய்தபின் அதற்கான ஒப்புகையை உத்தேச அச்சிட்டுக் கொள்ளலாம். ஒருவர் எத்தனை விடைகளுக்கு வேண்டுமானாலும் மறுப்பு தெரிவிக்கலாம். கையால் எழுதப்பட்ட குறிப்புகள் விடைக்கான ஆதாரமாக கருதப்பட மாட்டாது. அஞ்சல் அல்லது மின்னஞ்சல் மூலம் பெறப்படும் கோரிக்கைகள் எந்தக் காரணம் கொண்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது.
கடைசி தேதி: புதன்கிழமை வெளியிடப்படும் குரூப் 2 உத்தேச விடைகளில் தவறு இருந்தால், வரும் 20 -ஆம் தேதிக்குள் இணையதளத்தின் மூலமாக மறுப்பு தெரிவிக்கலாம் என டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.